தனி தெலுங்கானாவுக்கு சோனியா ஆதரவு, ராகுல் கடும் எதிர்ப்பு
டெல்லி: தனி தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது மகனும், கட்சியின் துணை தலைவருமான ராகுல் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு ஆந்திர மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த தெலுங்கானா விவகாரத்தால் ஆந்திராவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிட வேண்டும் என்று தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் முனைப்பாக உள்ளனர்.
ஆனால் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களோ தனி தெலுங்கானாவுக்கு எதிராக உள்ளனர். தெலுங்கானா விவகாரத்தில் ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே மட்டுமல்ல அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கும் இடையேயும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
தனி தெலுங்கானாவை அமைத்துவிடலாம் என்று சோனியாவும், ஆந்திராவை பிரிக்கவே கூடாது என்று ராகுலும் தங்களது முடிவில் தீர்க்கமாக உள்ளனர். அண்மையில் தெலுங்கானா விவகாரம் குறித்து டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தான் இந்த கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரிய வந்தது.
மூத்த அமைச்சர்களுடன் பேசிய சோனியா, தனி தெலுங்கானா அமைக்கப்படும் என்று நான் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியிடம் தெரிவித்தேன். ஆனால் அது பல்வேறு காரணங்களால் இழுத்துக் கொண்டே போகிறது. எப்பொழுது தான் எனது வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதனால் நீங்களே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications