அரசியல் கொலை நகரமாகும் வேலூர்: இந்து முன்னணி மாநில செயலாளர் வெட்டிக் கொலை

வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரி கோவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசுடைமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டங்களுக்கு அமைப்பின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன் தலைமை தாங்கி வந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு அவர் வேலூர் ராமகிருஷ்ணா மடத்திற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்ததும் இந்து முன்னணியினர் சம்பவ இடத்தில் கூடியிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெயில் நகரமான வேலூர் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கொலைகள் நடக்கும் நகரமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜக மருத்துவர் அணியின் மாவட்ட செயலாளர் அரவிந்த் ரெட்டி அவரது கிளினிக் அருகே கொலை செய்யப்பட்டார். மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.ஜி. ரமேஷை மர்ம நபர்கள் அவரது வீட்டுக்கு அருகிலேயே வெட்டிக் கொன்றனர். ரமேஷை கொலை செய்தவர்கள் இன்று வரை போலீசாரிடம் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications