ஜெட்- எதிஹாட் ஒப்பந்தத்தில் சர்ச்சை...பரிசீலிக்க பிரதமர் அலுவலகம் உத்தரவு!

நாட்டின் விமான சேவை துறையில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது. மிக நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் ஜெட் ஏர்வேஸ் தமது 24% பங்குகளை ரூ2058 கோடிக்கு எதிஹாட் ஏர்வேஸுக்கு விற்பனை செய்தது.
ஆனால் 24% பங்குகளை வைத்திருக்கும் எதிஹாட் ஏர்வேஸிடமே பல்வேறு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கும் வகையில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு சரத்துகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்று பாஜகவின் எம்.பி. ஜஸ்வந்த்சிங், திரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோர் புகார் கூறியிருந்தனர். இதேபோல் விமான போக்குவரத்து தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவரான சீத்தாராம் யெச்சூரியும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில சந்தேகங்களை முன்வைத்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஜஸ்வந்த்சிங்., அவசரகாலங்களில் ராணுவமே நாட்டின் வர்த்தக விமான போக்குவரத்தை மேற்கொள்ளும். ஆனால் அப்படி ஒரு அவசர காலத்தில் ஜெட் ஏர்வேஸின் சேவைகளை நாம் பயன்படுத்த முடியாத ஒரு நிலை உருவாகும்.. நாட்டின் விமான சேவை துறை அன்னிய நிறுவனத்திடம் இருப்பதை எப்படி அனுமதிக்கலாம் என்கிறார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் ஜஸ்வந்த்சிங் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் அமைப்பான எஃப் ஐபிபி, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெட் ஏர்வேஸ்- எதிஹாட் ஒப்பந்தத்தின் மீதான இறுதி முடிவை ஒத்தி வைத்து கூடுதல் விளக்கங்களைக் கோரியிருந்தது. எதிஹாட் ஏர்வேஸுக்கு கூடுதல் கட்டுப்பாட்டு உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸ்- எதிஹாட் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் நிலை உருவெடுத்திருக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கைப் போல் இந்த ஒப்பந்தமும் இணைந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெட்- எதிஹாட் ஒப்பந்தம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஆராயுமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து அமைச்சகமும் நிதி அமைச்சகமும் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கேபினட் செயலர் தலைமையில் இன்று அமைச்சக செயலர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications