அவதூறு வழக்கு: பிடிவாரண்டை ரத்து செய்ய விஜயகாந்த் மனு!

கேப்டன் டி.வி.யில் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பேட்டி கொடுத்த விஜயகாந்த், பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா விளம்பரங்களை அள்ளிக்கொடுத்து, லட்சக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடிப்பதாக கூறினார்.
பத்திரிகைகளை காக்கா பிடித்துக்கொண்டால்தான் அவரது முறைகேடுகள் வெளியிடப்படாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து இந்த விளம்பரங்களை கொடுக்கிறார் என்று பேசினார்.
விஜயகாந்தின் பேச்சு, முதல்வர் ஜெயலலிதா மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே, அவர் மீது அவதூறு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா தரப்பில் சென்னை நகர குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜூலை 1ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று விஜயகாந்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று (1ஆம் தேதி) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பிலோ வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், வேறு அவதூறு வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானதால் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் இதனால் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications