இந்திய தூதரகத்தை உளவு பார்த்து ஆழம் பார்த்த அமெரிக்கா... ஸ்னோடென் பரபரப்புத் தகவல்!
வாஷிங்டன்: இந்திய தூதரகம் உள்பட மொத்தம் 38 தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த விவரத்தை வெளியிட்டுள்ளார், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவரான எட்வர்ட் ஸ்னோடென்.
விக்கிலீக்ஸைத் தொடர்ந்து தற்போது ஸ்னோடன் மூலம் பெரும் தலைவலியில் சிக்கியுள்ளது அமெரிக்கா.
ஸ்னோடென் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முன்பு கம்ப்யூட்டர் பொறியாளராக வேலை பார்த்தவர். இவர் தற்போது அமெரிக்காவின் உளவுப் பணிகள் குறித்த பல ரகசியங்களை புட்டுப் புட்டு வைத்து வருகிறார்.
இதனால் கோபமானது அமெரிக்கா. இதையடுத்து நாட்டை விட்டே வெளியேறி விட்டார் ஸ்னோடென். ரஷ்யாவில் தற்போது பதுங்கியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் உளவு
ஸ்னோடென் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் இந்திய தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரங்களை அமெரிக்க அரசு உளவு பார்த்ததாக கூறியுள்ளார். இந்த தூதரகங்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ளவையாகும்.

இன்டர்நெட் கேபிள்கள் மூலம் ஊடுறுவல்
இந்தத் தூதரகங்களின் இன்டர்நெட் கேபிள்களில் ரகசியமான முறையில் நவீன ஆண்டெனாக்களை சொருகி அதன் மூலம் முக்கியத் தகவல்களை சுட்டுள்ளதாம் அமெரிக்கா.

நட்பு நாடுகளையும் விடாத அமெரிக்கா
இந்தியா தவிர பல்வேறு நட்பு நாடுகளின் தூதரகங்களையும் இவ்வாறு உளவு பார்த்துள்ளதாம் அமெரிக்கா. இதுகுறித்த தகவல்களை கார்டியன் பத்திரிக்கை விரிவாக வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் தூதரகங்களுக்கும் குறி
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தூதரகங்களையும் அமெரிக்கா இவ்வாறு உளவு பார்த்துள்ளதாக தகவல்கள் கூறுவதால், அந்த நாடுகள் கடுப்பாகியுள்ளன. அமெரிக்க அரசிடம் விளக்கம் கோரியுள்ளன.

ஜப்பானையும் விடவில்லை
அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடாக உள்ளது ஜப்பான். அதேபோல தென் கொரியா, மெக்ஸிகோவும் நட்பு நாடுதான். இவற்றின் தூதரகங்களையும் கூட அமெரிக்கா விடவில்லை.

கோட் வார்த்தைகள்
ஒவ்வொரு நாட்டுத் தூதரகத்தையும் உளவு பார்க்க சங்கேத வார்த்தைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு என்ன பெயர் வைத்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஐரோப்பிய யூனியனுக்கு பெர்டிடோ
ஐரோப்பிய யூனியன் நாடுகளை உளவு பார்க்க வைக்கப்பட்ட பெயர் பெர்டிடோ என்பதாகும்.

பிரான்ஸுக்கு பிளாக் பூட்
ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதரகத்தை கண்காணிக்க வைக்கப்பட்ட பெயர் பிளாக்பூட் என்பதாகும்.

ஹெம்லாக் இத்தாலி
வாஷிங்டனில் உள்ள இத்தாலி தூதரகத்தை உளவு பார்க்க வைக்கப்பட்ட பெயர் ப்ரூனியு மற்றும் ஹெம்லாக் என்பதாகும்.

இதெல்லாம் சகஜம்தான்- சென்
இந்த உளவு பார்க்கும் விவகாரம் குறித்து முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென் கூறுகையில், இது சாதாரணமானதுதான். வழக்கமாக நடப்பதுதான். இதை பெரிதுபடுத்தவோ, பதட்டப்படவோ தேவையில்லை. ஒருவர் பேசினால் இன்னொருவர் ஆர்வத்துடன் கவனிப்பார்கள்தானே.. அதுபோலத்தான் இதுவும் என்றார்.

இந்தியா அதிருப்தி
சென் இப்படிக் கூறினாலும் கூட இந்திய அரசு இந்த விஷயம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுகுறித்த விவரங்களை அறிய ஆர்வமாக உள்ளோம். இது விசாரிக்கப்பட வேண்டும். இந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications