துரத்தி வந்து தாக்கினர்.. இயக்குநர், உதவி இயக்குநர் மீது திருநங்கை ரோஸ் புகார்
சென்னை: தன்னை காரில் துரத்தி வந்து சினிமா உதவி இயக்குநர்கள் தாக்கியதாகவும், அதற்கு இயக்குநர் செந்தில்குமாரும், உதவி இயக்குநர் சீனுவும்தான் காரணம் என்றும் இது கொலை முயற்சி என்றும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் இப்படிக்கு ரோஸ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான திருநங்கை ரோஸ்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்த ரோஸ் இந்தப் புகாரைக் கொடுத்தார்.
புகார் குறித்து விசாரிக்க கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
இப்படிக்கு ரோஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோஸ்.
சினிமாவில் நடிப்பு
தற்போது இவர் வாய்மை என்ற படத்தில் நடித்து வருகிறார். கலெக்டர் வேடத்தில் இவர் வருகிறாராம்.
போலீஸில் திடீர் புகார்
இந்த நிலையில் இன்று பிற்பகல் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ரோஸ், இயக்குநர் செந்தில்குமார், உதவி இயக்குநர்சீனு ஆகியோர் மீது கொலை முயற்சி புகார் கொடுத்தார்.
நடந்தது என்ன...?
இதுகுறித்து ரோஸ் கூறுகையில், நான் வாய்மை என்ற படத்தில் திருநங்கை கலெக்டராக நடித்து வருகிறேன். இந்த படத்தை செந்தில் குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
துரத்தி வந்தனர்
நேற்று காலையில் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது படப்பிடிப்பு குழுவினரிடம் அனுமதி பெற்று காரில் வெளியில் சென்றேன். அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இன்னோரு காரில் சினிமா உதவி இயக்குனர்கள் சிலர் என்னை தொடர்ந்து வந்தனர்.
கண்ணாடியை உடைத்து தாக்கினர்
அவர்கள் எனது காரை மறித்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். எனது கார் கண்ணாடியை உடைத்து கொலை செய்ய முயன்றனர். இதற்கு டைரக்டர் செந்தில்குமாரும், உதவி இயக்குனர் சீனுவும்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரோஸ்.