மதுரை கலெக்டர் மாற்றம்... போஸ்டர் பரபரப்பு: அதிமுகவினருக்கு விருந்து கொடுக்கும் பி.ஆர்.பி?

மதுரை மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிரானைட் முறைகேடு செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, அவற்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை ஏலம்விட நடவடிக்கை எடுத்த மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்துக்கு கிரானைட் அதிபர்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. புள்ளிகளுமே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாற்றத்துக்கு எதிராக மதுரையில் பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரு போஸ்டரில், ‘‘தர்ம தேவதை அம்மாவின் ஆட்சியில் களங்கம்! ஊழல் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த நேர்மையான கலெக்டர் திரு.அன்சுல் மிஸ்ராவை இடமாற்றம் செய்தவதா? ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் கிரானைட் கொள்ளையர்களின் கூட்டுச்சதியா? அதற்கு தமிழக அரசு துணை போவதா? நேர்மையான அதிகாரிகளுக்கு கிடைக்கும் வெகுமதி இடமாற்றமா? கிரானைட் கொள்ளை வழக்குகள் முடியும் வரை கலெக்டர், எஸ்.பி.யை மாற்றாதே'' என்ற வாசகங்கள் உள்ளன.
நிலங்களை மீட்கவேண்டும்
மற்றொரு போஸ்டரில், ‘‘கிரானைட் கொள்ளையில் தொடர்புடைய எஞ்சிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களை மீட்க வேண்டும்'' என்ற வாசகங்கள் உள்ளது. இந்த போஸ்டர்கள், மதுரை கலெக்டர் அலுவலகம், கிரானைட் கொள்ளையின் தாயகமான மேலூர் வட்டாரத்தில் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன.
குற்றாலத்தில் விருந்து
இந்த நிலையில் தனக்கு வேண்டாத அதிகாரியைத் துக்கியடிக்க உறுதுணையாக இருந்த அ.தி.மு.க. புள்ளிகளுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில், கொடைக்கானல், குற்றாலத்தில் விருந்து ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டர், எஸ்.பி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய 4 எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், 3 நகராட்சித் தலைவர்கள், 11 யூனியன் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த விருந்தில் கலந்து கொள்ள, சில அ.தி.மு.க. புள்ளிகள் ஒவ்வொருவராக செல்லத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications