திவ்யா எனக்குச் சொன்ன முதல் ஐ லவ் யூ... இளவரசனின் உருக்கமான கடிதம்

தர்மபுரி கலவரம் வெடிக்க காரணமான காதல் ஜோடியில் காதலன் இளவரசனின் உடல் நேற்று தர்மபுரி அரசு கல்லூரிக்கு பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவரது சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று இளவரசன் தனது காதல் மனைவி திவ்யாவை பற்றி எழுதியது. மற்றொன்று திவ்யா இளவரசனுக்கு எழுதிய கடிதம்.
அந்த கடிதம் ஒன்றில் இளவரசன் கூறியிருப்பதாவது,
2010-ல் திவ்யாவை நான் முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் ஐ லவ் யூ கூறினார். ஜனவரி 1-ம் தேதி நானும், திவ்யாவும் வெளியில் போனோம். இந்த நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. பிறகு சினிமாவிற்கு போனோம். அப்போது முதன்முதலில் திவ்யாவை முத்தமிட்டேன். திவ்யாவின் அண்ணனுக்கு நாங்கள் வெளியில் சென்று வருவது தெரிய வந்தது. இதனால் எங்களை அவர் சத்தமிட்டார். இதனால் நாங்கள் வெளியில் செல்லவில்லை.
எங்கும் சேர்ந்து போகாமல் இருந்து வந்தோம். பிறகு திவ்யா செல்போனில் பேசினார். பின்னர் மீண்டும் பேச தொடங்கினோம். சில நாளில் நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று தாலி கட்டிக் கொண்டோம்.
இதன் பின்னர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மதியம் 1 மணி முதல் மாலை வரை ஒன்றாக இருந்தோம். பின்னர் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். எங்கள் காதல் ஊராருக்கு தெரிந்து எதிர்ப்பு அதிகமானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ளது இளவரசனின் கையெழுத்து தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இளவரசனின் ஊரில் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து அவர் சோகமாக திவ்யாவின் நினைவாகவே இருந்துள்ளார். மேலும் அவர் திவ்யா தனக்கு எழுதிய கடிதங்களை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு சுற்றியுள்ளார். அடிக்கடி அந்த கடிதங்களை எடுத்துப் பார்த்து வந்துள்ளார்.
இளவரசனுக்கு திவ்யா ஆங்கிலத்தில் எழுதிய காதல் கடிதம் இளவரசனின் சட்டைப்பையில் இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் திவ்யா தான் இளவரசனுடன் பழகியது பற்றியும், அவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தில் உள்ளது திவ்யாவின் கையெழுத்து தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications