என்எல்சி பங்கு விற்பனை.. என் யோசனையைக் கேளுங்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...
என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்தது தமிழ்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
என்.எல்.சி. நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தமிழ் நாட்டை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருறார்கள். 2490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தென் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்திருப்பது மிகவும் மோசமான தாக்கத்தை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவர்களை வேதனையில் தள்ளியுள்ளது. தமிழ்நாட்டு மக்களும் பங்கு விற்பனையை எதிர்த்து வருகின்றனர். என்.எல்.சி. பங்குகளை விற்ககூடாது என்பது தொடர்பாக நான் 2003-ம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இப்போது அந்த பிரச்சினை எழுந்ததையடுத்து நான் உங்களுக்கு 3 தடவை கடிதம் அனுப்பி இருக்கிறேன். அதில் 2 யோசனைகளையும் வழங்கியிருந்தேன். இது தொடர்பாக நீங்கள் எனக்கு 8-ந் தேதி அனுப்பி இருந்த கடிதம் அதிருப்தி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் முந்தைய அரசின் தவறான செயல்பாட்டால் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அவர்கள் திட்டமிட்டு செயல்படாததால் இந்த நிலமை உருவானது. இதனால் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறை நிலவியது.
எனது தலைமையிலான அரசு உருவானதற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புதிய மின் உற்பத்திகள் தொடங்கப்பட்டுள்ளன. மேட்டூரில் 600 மெகாவாட், வல்லூரில் 500 மெகாவாட், வட சென்னையில் 600 மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் மின் தட்டுப்பாட்டை முற்றிலும் நீக்கி மின்மிகு மாநிலமாக மாற்ற இருந்த நிலையில் என்.எல்.சி.யில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசு எடுத்த தவறான முடிவால் இந்த நிலைமை உருவாகி இருக்கிறது.
என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் 2490 மெகாவாட்டில் தமிழக பங்காக 1178 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. போராட்டத்தால் இந்த மின்சாரம் எங்களுக்கு கிடைப்பது பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் என்.எல்.சி.யிடம் இருந்து எரிபொருள் வாங்கி மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் 250 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெற்கு பிராந்தியம் முழுவதும் 2500 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
நான் ஏற்கனவே ஜூன் 22-ந் தேதி அனுப்பி இருந்த கடிதத்தில் மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசுக்கு விற்கவேண்டும் என்று கூறியிருந்தேன். தமிழ்நாடு தொழில்வளற்ச்சி கழகம், சிப்காட், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் போன்றவற்றுக்கு இதை விற்கலாம். இதற்காக பங்கு நிறுவன கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (செபி) விதிமுறைகளை மாற்றி பங்குகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
எனது யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு தக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பங்குகளை விற்பதை மறுபரிசீலனை செய்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் முடிவு எடுப்பதை தாமதபடுத்தினால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே உடனடியாக உரிய முடிவுகளை எடுத்து பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினைக்கு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications