புத்த கயா குண்டுவெடிப்பு.. மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது?: ட்விட்டரில் திக்விஜய்சிங்!
டெல்லி: பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் புது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்.
மியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன. மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர். புத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா? முழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா?
இன்னொரு பக்கமும் பாருங்கள்... அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். அதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பற்ற வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications