காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ!: ஆவணங்கள் நாசம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தலைமைச்செயலம் அருகே 2 மாடி கட்டிடம் உள்ளது. இதில் அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதையடுத்து, பணிக்கு வந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இது முழுவதும் மரத்தால் ஆன கட்டிடம். அதனால் தீ விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் கட்டிடம் முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் கொளுந்து விட்டெறியும் தீயை அணைக்கப் போராடி வருகின்றன. அருகில் உள்ள பல குடிசைகளுக்கும் தீ பரவியதால் அவை எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.