ஜி.கே.வாசனின் தொடரும் ‘சவுண்டு’.. உதயமாகிறதா த.மா.கா?
சென்னை: சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளால் அவர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பை மீறி 1996-ல் மூப்பனார் காலத்தில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்காக உருவானது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. அவர் மறைவுக்குப் பின் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பை ஏற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் ஐக்கியமானார். அண்மைக்காலமாக ஜி.கே.வாசனுக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்குமான முறுகல் நிலை அதிகரித்து வருவதால் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உருவாகுமா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் எழுந்தபடியே இருக்கிறது.
ராகுலுடன் முட்டல் மோதல்
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் கை ஓங்கிய நிலையில் ஜி.கே.வாசனை புறக்கணிப்பது என்ற நிலையை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டது. அவரது ஆதரவாளரான யுவராஜா திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போதே ராகுலுக்கும் வாசனுக்குமான முட்டல் மோதல் தொடங்கிவிட்டது. வாசனின் ஆதரவாளர்களும் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிவிடுவோம் என்று முழக்கமிடத் தொடங்கி பேனர்களே வைக்கவும் செய்தனர்.
குழப்பும் வாசன்
இதைத் தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் விவகாரம் என தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்தும் திமுக, அதிமுக நிலைப்பாடுகளை வழிமொழிவது போலவே ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்து வருகிறார். மத்திய அரசை எதிர்க்காமல் ஆனால் மத்திய அரசின் நிலைக்கு எதிராக வாசன் தொடர்ந்தும் பேட்டியளித்து வருவது காங்கிரசார் மத்தியில் குழப்பத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது.
சேது சமுத்திர திட்டம், அழகிரி சந்திப்பு
அண்மையில் கூட ஜி.கே.வாசன், சேது சமுத்திர திட்டம் குறித்து பேசுகையில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தயாராகவே இருக்கிறது என்று கூறி குழப்பிவிட்டார். பின்னர் திடீரென திமுகவின் மு.க. அழகிரியுடன் நெருக்கம் பாராட்டியதுடன் நேற்று மதுரையில் சந்தித்தும் பேசியிருக்கிறார்.
தமாகா உதயம் உறுதி
இது தொடர்பாக நம்மிடம் கருத்து தெரிவித்த ஜி.கே.வாசன் வட்டாரங்கள், தாம் எப்போது மாநில நலனுக்காக எப்போதும் நான் குரல் கொடுப்பேன் என்பதை காங்கிரஸ் மேலிடத்துக்கு காட்டுவதற்காகவே இப்படி கூறிவருகிறார். அவரைப் பொறுத்தவரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் உதயமாவதற்கான புறச் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டே வருகிறார்.. திமுக அல்லது அதிமுக சார்பில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க உறுதி கிடைத்துவிட்டால் நிச்சயம் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகிவிடும் என்கின்றன.
அப்ப லோக்சபா தேர்தலில் புதிய கட்சி உதயமாவது உறுதி?