சித்தூர் கார்த்தி, சென்னை மனோஜ்குமாருடன் இளவரசன் கடைசிப் பேச்சு...!

இதில், கார்த்தியிடம்தான் அவர் நீண்ட நேரம் அதாவது 1035 விநாடிகளும், மனோஜ்குமாரிடம் 900 விநாடிகளும் அவர் பேசியுள்ளார்.
இளவரசன் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவரது செல்போனில் கடைசியாக அவர் யாருடனெல்லாம் பேசினார் என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன்படி தனது மரணத்திற்கு முன்பு ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கார்த்தி என்பவருடனும், சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடனும் அதிக நேரம் கடைசியாக பேசியுள்ளார் இளவரசன்.
இதையடுத்து இருவரையும் நேரில் வரவழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். மேற்கு மண்டல ஐஜி டேவிட்சன் ஆசிர்வாதமே நேரடியாக விசாரணை நடத்தினார்.
அப்போது இருவரும், இளவரசன் தங்களிடம் பேசியது குறித்த விவரத்தை தெரிவித்துள்ளனர்.
கார்த்திதான், இளவரசன், திவ்யா திருமணம் செய்து கொண்டபோது அவர்களுக்கு சித்தூரில் ஆதரவு கொடுத்து காத்துள்ளார். பின்னர் தர்மபுரியில் இயல்புநிலை திரும்பியதால் இளவரசன் அங்கிருந்து திவ்யாவுடன் வந்து விட்டார்.
இனிமேல் இளவரசனுடன் போக மாட்டேன் என்று திவ்யா கடைசியாக கூறியதும் மனம் உடைந்த நிலையில் இளவரசன் தர்மபுரி திரும்பினார். அதன் பின்னர் கார்த்தி, மனோஜ்குமாரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
திவ்யா இப்படி சொல்லி விட்டாள் அவள் வராவிட்டால் நான் எப்படி வாழபோகிறேன், அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார் இளவரசன். அவருக்கு இரு நண்பர்களும் ஆறுதலர் கூறியுள்ளனர்.
போனில் பேசியபோது தழுதழுத்த குரலில் பேசினாராம் இளவரசன். அவருக்கு தாங்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை என்று மனோஜ்குமாரும், கார்த்தியும் கூறியுள்ளனர்.
இளவரசன் சமாதானமாகாததைத் தொடர்ந்து, நீ அங்கு இருந்தால் கஷ்டமாக இருக்கும். பேசாமல் இங்கு வந்து விடு. ஏதாவது வேலை வாங்கித் தருகிறோம். பார் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில்தான் இளவரசன் மரணித்துள்ளார். இந்தத் தகவல் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications