பாமக வக்கீல் கே.பாலுவன் கார் உடைப்பு.. திவ்யாவுக்காக வாதாடியவர்
சென்னை: தர்மபுரி இளவரசனை திவ்யாவிடமிருந்து பிரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடியவரான வழக்கறிஞர் கே.பாலுவின் கார் சென்னையில் நேற்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது.
பாமகவுடன் தொடர்புடையவர் பாலு. பாமக மாநாடுகள், கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பவர். இவர்தான் தர்மபுரி இளவரசனிடமிருந்து தனது மகளை மீட்டுத் தரக் கோரி திவ்யாவின் தாயார் தேன்மொழி தொடர்ந்து ஹேபியஸ் கார்பஸ் மனு மீது திவ்யாவுக்காக ஆஜராகி வாதாடினார்.
ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கு திவ்யா வந்தபோதும் இவர்தான் திவ்யா சார்பில் பேசினார். சில முறை திவ்யாவையும் தனது அருகில் நிறுத்தி பேச விட்டார்.
இந்த நிலையில், பாலுவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. பாலுவின் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.