இளவரசன் இறுதி சடங்கில் திவ்யா கலந்து கொள்ள மாட்டார்!- அதிகாரிகள்
தர்மபுரி: இளவரசன் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தன் மகன் இளவரசன் இறுதிச் சடங்குகளை திவ்யா வந்து செய்ய வேண்டும் என்றும், அவரது முகத்தில் தனது மகனை பார்ப்பதாகவும் இளவரசனின் தந்தை இளங்கோ கூறியிருந்தார்.
இளவரசனின் இறுதிச் சடங்கில் திவ்யா குடும்பத்தினர் கலந்து கொள்ள விரும்பினால் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
நீதிபதிகளின் இந்த உத்தரவு திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அடங்கிய தபாலை அவர்கள் குடும்பத்தினரிடம் கடந்த 9-ந் தேதி தர்மபுரி தாசில்தார் விஜயா நேரில் சென்று வழங்கினார்.
அப்போது அவரிடம் திவ்யா குடும்பத்தினர் சீல் வைக்கப்பட்ட தபாலை கலெக்டருக்கு வழங்க கொடுத்து அனுப்பினர். அந்த தபால் கலெக்டர் விவேகானந்தனிடம் சேர்க்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதில் உள்ள விவரங்களைத் தெரிவிக்க மறுத்த கலெக்டர், அக்கடிதத்தை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி விட்டதாகக் கூறினார்.
இந்த நிலையில் இளவரசன் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6-ந் தேதி முதல் செல்லன் கொட்டாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் தாயாருடன் தங்கி உள்ள திவ்யா வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. அவரைப் பார்க்க வரும் அவரது உறவினர்களும் போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினர் அனுமதித்தால் மட்டுமே திவ்யாவை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது திவ்யா வீட்டு முன்பு பகல் மற்றும் இரவில் தலா 80 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இளவரசன் இறுதிச் சடங்குக்குப் பிறகு படிப்படியாக காவலர் எண்ணிக்கை குறைக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications