ராஜஸ்தானில் மிக்-21 போர் விமானம் விபத்து: விமானி பலி
பார்மர்: ராஜஸ்தானில் மிக்-21 பைசன் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் இருந்து மிக் 21 பைசன் ரக போர் விமானம் இன்று காலை பயிற்சிக்கு புறப்பட்டது. விமானம் காலை 9.30 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மிக் 21 ரக விமானம் இதே உத்தர்லாய் விமான தளத்தில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தநர். மிக் 21 ரக விமானங்கள் சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலகு ரக போர்விமானங்கள் வரும் வரை வரும் 2018-2019ம் ஆண்டு வரை மிக் 21 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
40 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் 900 மிக் 21 ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 2 மிக் 21 ரக விமானங்கள், மிக் -29, மிக்-27, எஸ்யூ-30எம்கேஐ மற்றும் எம்ஐ-17வி5 ஆகிய ரக விமானங்களில் தலா ஒன்றும் விபத்துக்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications