ரேஷன் கடையில் கூடுதல் வசூல்: புகார் தந்தவருக்கு அடி, உதை, கொலை மிரட்டல்
ராமநாதபுரம்: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குபவர்களிடம் கூடுதலாக வசூலிக்கின்றனர் என்று புகார் கொடுத்த நபரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலவாடி வட்டம் ஒருவாணேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வன். இவர் தனது பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் கூடுதலாக ரூபாய் 5 வசூல் செய்கிறார்கள். கொடுக்க மறுப்பவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று கடலவாடி வட்ட வழக்கல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.
வட்ட வழங்கல் அதிகாரி பரிந்துரையின் பேரில், மண்டல இணை ஆணையர் ஆய்வு செய்து, கூடுதலாக பணம் வசூலித்த 8 ரேஷன் கடை விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 பேரும் தன்னை அடித்து, உதைத்து, லாரி ஏற்றி கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம், தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்து மனு அளித்தார் திருச்செல்வன்.
தனிப்பட்ட எனக்காக நான் புகார் செய்யவில்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக்காகத்தான் 5 ரூபாய் கூடுதலாக வசூல் செய்கிறார்கள் என்று புகார் அளித்தேன். இப்போது என்னை தாக்கியுள்ளனர். உயிருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்தான் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று திருச்செல்வன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications