“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்!
சென்னை: தவெக உடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம் இயற்றியிருந்தது. இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். தேர்தல் தோல்விக்கு பிறகு கூட திமுக பாடம் கற்கவில்லை என்று விமர்சித்திருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்டது. கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளை தான் திமுக ஒதுக்கியிருந்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு
இருப்பினும் ஆரம்பத்திலிருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற விஷயத்தை காங்கிரஸ் வைக்க, திமுக தொடர்ந்து இதனை மறுத்து வந்திருந்தது. இப்படி இருக்கையில்தான் தேர்தலில் 5 தொகுதிகளை வென்று அப்படியே தவெக பக்கம் தாவியது. விஜய் முதல்வராக காங்கிரஸ் முழுமையான ஆதரவு கொடுத்தது. காங்கிரஸ் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளான இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன.
திமுக அதிருப்தி
ஆனால், இந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம் மரியாதை நிமித்தமாக அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவரை சந்தித்து பேசிய பின்னர், தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், காங்கிரஸ் இப்படி எதையும் செய்யவில்லை. எனவே திமுக கடும் அதிருப்தியில் இருந்தது.
இப்படி இருக்கையில், இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
திமுக தீர்மானம்
கடந்த பல தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கழக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது! நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர்.
நன்றி கூட சொல்லாமல்
தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.
இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.
பயணிக்கும் படகில் ஓட்டை
அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர் என்று குறிப்பிட்டு காங்கிரஸுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், திமுகவின் வாக்குகளால்தான் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றார்கள் என்பதை ஏற்க முடியாது என்றும், தேர்தல் தோல்விக்கு பிறகு கூட திமுக பாடம் கற்கவில்லை என்றும் சாடியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications