50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்!
திருப்பூர்: திமுகவின் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், மாற்று கட்சியிலிருந்து வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் மா.செ ஆக பொறுப்பேற்றிருக்கிறார். இதனால் திருப்பூரில் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் தோல்வியால் திமுக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகள் கழற்றிவிட்டு சென்றது ஒருபுறம் எனில், மறுபுறம் உட்கட்சி பூசல்கள் புதியதாக முளைக்க தொடங்கியிருக்கின்றன.

என்ன நடந்தது?
திருப்பூரில் நடந்ததும் இதே பஞ்சாயத்துதான். திருப்பூரில் மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலே திமுகவில் இருந்து வருகிறார். திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர், கட்சியின் நெருக்கடியான காலத்தில் உடன் நின்று வேலை செய்திருக்கிறார். ஆனால், இப்போது நிலைமை மோசமடைய தொடங்கியிருக்கிறது.
தலைமைக்கு கடிதம்
வேறு கட்சியிலிருந்து வந்த தினேஷகுமாருக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் தொழிலதிபருக்கும் கட்சி தலைமை முக்கியத்துவம் கொடுப்பதால் டென்ஷன் ஆன செல்வராஜ், கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக தலைமைக்கு கடிதம் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார். அந்த கடிதத்தில்,
50 ஆண்டு விசுவாசம்
"50 ஆண்டுகளாக கட்சியில் விசுவாசமாக இருக்கிறேன். இதற்காக ஏராளமான வழக்குகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் கடந்த 2022ம் ஆண்டு முதல் வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு கட்சி தலைமை முக்கியத்துவம் கொடுக்கிறது. அதிகாரமிக்க பதவிகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. எனவே இது என்னை வேதனைபடுத்தியிருக்கிறது. நடந்து முந்த தேர்தலில் திருப்பூர் தெற்கில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், நான் கேட்காத பல்லடம் தொகுதி கொடுக்கப்பட்டிருந்தது.
தொழிலதிபரின் தலையீடு
அதே சமயம் மாற்று கட்சியிலிருந்து வந்த தினேஷ்குமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஆதரவாக தொழிலதிபர் டாலர் மணி இருக்கிறார். இப்படியாக தொழிலதிபர் மற்றும் மாற்று கட்சியினருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் 50 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் எனக்கு கொடுக்கப்படுவதில்லை?" என்று கேள்வி எழுப்பி விலகியிருந்தார்.
கட்சியின் வளர்ச்சி
ஆனால், கட்சியின் தலைமை இதனை அவ்வளவாக ரசிக்கவில்லை. மிகப்பெரிய தோல்வியை எதிர்த்து சண்டை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து யார் விலகுவதையும் கட்சி விரும்பவில்லை. எனவே கட்சி தலைமை செல்வராஜை அழைத்து பேசி கண்டித்திருக்கிறது. கட்சியின் வளர்ச்சி மட்டுமே இப்போதைய நோக்கம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறது.
மீண்டும் இணைந்த செல்வராஜ்
இந்த பின்னணியில் மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு, கட்சியின் மா.செ பொறுப்பை பழையபடி ஏற்றுக்கொண்டிருக்கிறார் செல்வராஜ்.
செல்வராஜின் மனநிலையை போல மேலும் ஒருசில மா.செக்களின் மனநிலை இருப்பதாகவும், திமுகவினர் புலம்புகின்றனர். திருப்பூரில் நடந்தது திமுகவின் தலைமையை அலர்ட் செய்திருக்கிறது. எனவே கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய தீவிர நடவடிக்கையில் தலைமை இறங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications