வாயை விட்ட ஆ.ராசா! சர்ச்சையான ட்வீட்! கொந்தளித்த தவெகவினர்.. மதுரை போலீசில் புகார்!
மதுரை: திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தற்போது தவெக கூட்டணியில் இணைந்திருக்கின்றன. மட்டுமல்லாது கூட்டணி ஆட்சியிலும் பங்கெடுத்திருக்கின்றன. இதை விமர்சிக்கும் விதமாக திமுக எம்பி ஆ.ராசா சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து தவெக தரப்பில் மதுரை காவல்துறையில் ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
திமுக கூட்டணியிலிருந்துதான் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர் கொண்டிருந்தன. இதில் காங்கிரஸ் மட்டும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என திமுகவுடன் கூட்டணியில் இருந்துக்கொண்டே தவெகவுடன் டீலிங் வைத்திருந்தது.

காங்கிரஸ் நிலைப்பாடு
தேர்தல் முடிவில் தவெக பெரிய கட்சியாக உருவெடுக்கக, உடனே திமுக உடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு சென்று விஜய்க்கு ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். காங்கிரஸின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், திமுக தலைமையிடம் கலந்த பேசிக்கொள்ளாமல், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றதுதான் திமுகவுக்கு கடும் அதிருப்தி ஏற்படுத்தியது.
தவெகவுக்கு ஆதரவு
அப்புறம் என்ன? இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர். ஐயுஎம்எல் மற்றும் விசிகவும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இப்போது வரை இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கவில்லை.
ஆனால், விசிக மற்றும் ஐயுஎம்எல் அதிகாரத்தில் பங்கெடுத்தன. இரு கட்சிகளிலிருந்து தலா ஒரு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது திமுக தலைமையை மேலும் டென்ஷன் ஆக்கியது.
வாயை விட்ட ஆ.ராசா
இந்த அதிருப்தியில் ஆ.ராசா கொந்தளித்துவிட்டார். அவர் தனது x பக்கத்தில் விசிக மற்றும் இதர கூட்டணி கட்சிகளை கண்டித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார். இது கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றியது. பிரச்சனை சீரியஸாவதை உணர்ந்த திமுக தலைமை, கடுஞ்சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட, ஆ.ராசாவும் தனது ட்வீட்டை டெலிட் செய்தவிட்டார்.
இருப்பினும் இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். மாவட்ட வாரியாக தவெகவினர் புகார் அளிக்கவும் கூறியிருந்தார்.
போலீசில் புகார்
இதனை தொடர்ந்து, மதுரை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் தவெக வழக்கறிஞர் கந்தசாமி, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆ.ராசா பதிவிட்டிருக்கிறார். இது தவெக தொண்டர்களிடையே அதிருப்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே ராசா மீது இணையதள குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு புகாரில் தெரிவித்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications