அதிக வட்டி தருவதாக கூறி 115 சவரன் நகைகளை மக்களிடமிருந்து வாங்கி ஏமாற்றிய வி.ஏ.ஓ. அருள்தேவி
காஞ்சிபுரம்: வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பணம் தேவைப்படுகிறது. பணமோ நகையோ தாருங்கள். அதை அதிக வட்டியுடன் திருப்பித் தருகிறேன் என்று கூறி கிராம மக்களிடமிருந்து 115 பவுன் நகைகள் மற்றும் பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுர் அருகே உள்ள கோட்டூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் அருள்தேவி. கணவர் இல்லை. இவர் கோட்டூர் மக்களிடம் தான் வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் நகையோ அல்லது பணமோ கொடுத்தால் அதை அதிக வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அருள்தேவியே கேட்கிறாரே என்று கிராம மக்கள் பலரும் நகை, பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால் வட்டியும் தரவில்லை. வாங்கிய பணம், நகையையும் திருப்பித் தரவில்லை அருள்தேவி.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தனர் மக்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருள்தேவியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 115 பவுன் நகைகளையும், பணத்தையும் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.
தற்போது அருள்தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.