மும்பை காமதிபுராவில் இருந்து அமெரிக்காவிற்கு உயர்கல்வி கற்க போகும் ஸ்வேதா காட்டி
மும்பை: நம்முடைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தாலும் நாம் வாழும் வாழ்க்கை முறை அதை சொர்க்கமாக்கும் என்பார்கள். அந்த வார்த்தையை உண்மையாக்கியுள்ளார் ஸ்வேதா காட்டி என்ற இளம் பெண்.
பிறந்த இடம் மும்பை சிவப்பு விளக்கு பகுதி என்றாலும் இப்போது தன்னுடைய அறிவுத்திறமையால் ஸ்காலர்ஷிப் பெற்று அமெரிக்காவில் உயர் கல்வி கற்றுவருகிறார்.
ஆரம்பக் கல்வியை மராத்தி மீடியம் பள்ளியில் தொடங்கிய ஸ்வேதா, பள்ளியில் மிகுந்த அவமானங்களை சுமந்துள்ளார். அந்த அவமானங்களே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான லட்சியத்தை அவருக்குள் ஏற்படுத்தி உள்ளது.

சிவப்பு விளக்குப் பகுதி
மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுராவில் பிறந்து வளர்ந்த ஸ்வேதா காட்டிக்கு இப்போது 18 வயதாகிறது. சுற்றிலும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புதான் ஸ்வேதாதாவின் வீடு. அவரது தாயார் விழாக்காலங்களில் பயன்படுத்தும் அலங்கார விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறார்.

மனஅழுத்தம் அதிகம்
காமதிபுராவிற்கு வரும் வாடிக்கையாளர்கள் இவரையே அழைக்கும் அவலம், காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகள் என மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர் வயதை ஒத்த சிறுமிகள் சந்தித்திராத மன அழுத்தங்களுடன் கூடியதுதான் ஸ்வேதாவின் பால்ய பருவம்.

அனைவருக்கும் முன் உதாரணம்
ஆனால் இன்றைக்கோ அவர் வளர்ந்த சிவப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் இவரைப்போன்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அப்பகுதியில் வாழும் இதர மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அமெரிக்கா போகும் ஸ்வேதா
ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்ட ஜூனியர் காலேஜ் ( பிளஸ் டூ ) கல்லூரியில், காமர்ஸ் பாடத்தை எடுத்து பயின்ற ஸ்வேதா, அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப்புடன் உயர் கல்வி பயிலும் அளவுக்கு படிப்பில் சிறந்து விளங்கி வருகிறார்.

தாழ்வு மனப்பான்மை
ஸ்வேதாவிற்கு சிறுவயதில் தாழ்வு மனப்பான்மையோடு இருந்துள்ளார். காரணம் அவர் கறுப்பாக இருப்பதுதான். இந்தியாவில் கறுப்பு தோலுடன் உள்ளவர்களை அசிங்கமானவர்கள் என்று சொல்கிறார்கள்.பள்ளியில் எனது நண்பர்கள் என்னை மாட்டுச் சாணி என்றும், கறுப்பு மூங்கில் என்றும் கேலி செய்வார்கள்.இதனால் என்னை நானே வெறுத்தேன்.நான் அழகாக இல்லை என்று நான் நினைத்தேன் என்கிறார் ஸ்வேதா.

தாயின் புன்னகை
அமெரிக்கா சென்று படித்தாலும் தனது அம்மாவுக்காக தான் இந்தியா திரும்பவே விரும்புவதாக கூறுகிறார் ஸ்வேதா. ஏனெனில் ஸ்வேதாவுக்கு தனது தாயாரின் முகத்தில் காணும் புன்னகைதான் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் பெரிதாக இருக்கிறதாம்.

கவுன்சிலிங் தெரபி
வாழ்க்கையின் மிகப்பெரிய சோகங்களையும், அதிர்ச்சிகளையும் சுமக்கும் காமதிபுரா மக்களுக்கு கவுன்சிலிங் தெரபி கிளினிக் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது ஸ்வேதாவின் லட்சியமாம். பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களால் இந்த உலகை வெல்ல முடியும்!" என்பதுதான் ஸ்வேதா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.












Click it and Unblock the Notifications