'ஷாஜிதா'வாகி ஜகுபர் சாதிக்கை மணந்த மாணவி சத்யபிரியா: பாதுகாப்பு கோரி மதுரை ஹைகோர்ட்டில் மனு
மதுரை: காதலித்து கலப்பு திருமணம் செய்த தொண்டி மாணவி தங்களுக்கு பாதுகாப்பு தோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள தொண்டியைச் சேர்ந்தவர் சத்யபிரியா என்ற ஷாஜிதா(19). அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டை. இந்து மதத்தை சேர்ந்தவள். தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது தஞ்சாவூர் மங்களாபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த தொண்டியை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் காதலித்தோம். இதனால் என்னை கல்லூரிக்கு செல்லவிடாமல் வீட்டில் அடைத்து வைத்து கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். கடந்த 17.5.2013 அன்று வீட்டை விட்டு வெளியேறிய நான், ராமநாதபுரத்தில் உள்ள ஜமாத்தில் 24.6.2013 அன்று ஜகுபர் சாதிக்கை திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு முன்பு எனது பெயரை ஷாஜிதா என்று மாற்றிக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். நானும், எனது கணவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறோம். நான், கலப்பு திருமணம் செய்து கொண்டதை அறிந்து எங்கள் ஊரில் உள்ளவர்கள் எங்களை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர்.
என்னையும், எனது கணவரையும் கவுரவ கொலை செய்ய வேண்டும் என்று சிலர் எங்களை கண்காணித்து வருகின்றனர். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. இது குறித்து தொண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர், எனது உறவினர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு எங்களை மிரட்டி வருகிறார். எனவே, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கூறுகையில், மனுதாரர் மேஜர் என்பதால் அவருக்கு தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. அதனால் கலப்பு திருமணம் செய்த இந்த ஜோடியை தொண்டி போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.
மேலும் இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அவர் வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications