புதுவையில் இன்று முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: காய்கறி விலை உயரும் அபாயம்

புதுவை மேட்டுப்பாளையத்தில் கடந்த 2007ம் ஆண்டு போக்குவரத்து நகர் அமைக்கப்பட்டது. அங்கு லாரிகளை நிறுத்த போதிய வசதி இல்லை. இதையடுத்து போக்குவரத்து நகரில் அலுவலகம் மற்றும் சரக்கு பெட்ட வசதி, லாரிகளை நிறுத்த போதிய இடம் கோரி புதுவை லாரி உரிமையாளர்கள், முகவர்கள், டிரான்ஸ்போர்டர்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து அவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அவர்களின் போராட்டத்திற்கு அகில இந்திய தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக புதுவைக்கு சரக்கு லாரிகளை அனுப்பி வைப்பதற்கான புக்கிங் நேற்று முன்தினம் முதலே நிறுத்தப்பட்டது. இது தவிர வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் புதுவைக்கு வந்து செல்லும் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. காலை 6 மணிக்கு முன் வந்த லாரிகள் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் 6 மணிக்கு மேல் வந்த லாரிகள் புதுவை எல்லையில் நிறுத்தப்பட்டன. இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புடைய வர்த்தகம் பாதிக்கப்படும் என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications