செல்போனைத்தான் எல்லோரும் முதல்ல தொலைக்கிறாங்க... 7 மாதத்தில் 268 செல்போன் கண்டெடுப்பு
டெல்லி: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் தவறவிடும் பொருட்களில், செல்போன்தான் முதலிடம் பிடித்துள்ளது என்று மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள 134 ரயில் நிலையங்களில், மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் முதல் ஏழு மாதத்தில், ரயில் பயணிகள் தவறவிட்ட பொருட்களில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டது செல்போன் தான் என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கம் முதல் ஜூலை 10ம் தேதி வரை கணக்கெடுப்பின் படி, பயணிகள் தவறவிட்ட பொருட்களில் 268 செல்போன்கள், 64 லேப்டாப், 38 கேமரா மற்றும் 4 டேப்லட் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
தங்க நகை, பணம்
இது மட்டும் அல்லாது, 27 பவுன் தங்க நகைகள், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 12.35 லட்சம் மதிப்புள்ள செக்குகள் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவையும் இந்த 7 மாதத்தில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.
சரியான அடையாளம் சொல்லுங்க
கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான பொருட் களை, தொலைத்த நபரை கண்டுபிடித்து அவர்களிடம், டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் முன்னிலை யில், கஷ்மீரிகேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.மீதமுள்ள பொருட்கள் எந்தெந்த ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதோ அந்ததந்த ரயில் நிலைய மேலாளரின் அறையில் பாதுகாக்கப் பட்டு, அவற்றை தவறவிட்ட சரியான நபர் வந்து கேட்கும்போது, ஆதாரங்களை சரிபார்த்து கொடுக்கப்படும் என்று ரயில்வே துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
அவசரத்தில் தொலைக்கின்றனர்
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், அவசரத்தால் உடைமைகளை இருந்த இடத்திலேயே விட்டுச் சென்றது, பயணிகளை எக்ஸ்ரே செய்யும் இடத்தில் விட்டுச் சென்றது மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள பல இடங்களில் விட்டுச்சென்ற பொருட்களை ரோந்து பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் கண்டெடுத்து உள்ளனர் என்று மத்திய தொழில்பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.