மும்பை பார்களில் டான்ஸ் ஆட தடை நீங்கியது: கொண்டாடிய டான்சர்கள்... தடை நீடிக்கும் மராட்டிய அரசு
மும்பை: மும்பை டான்ஸ் பார்களுக்கு தடை விதித்த, மராட்டிய மாநில அரசின் உத்தரவு செல்லாது. உரிய லைசென்ஸ் பெற்று, மீண்டும் டான்ஸ் பார்களை நடத்தலாம் என செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பினை டான்ஸ் பார் நடனமங்கைகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மும்பையின் பல பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட, "டான்ஸ் பார்'கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களில், ஆட்டம் போடும் நடன மங்கைகள், அரைகுறை உடை அணிந்து, ஆபாசமாக நடனமாடுவதாகவும், நடனங்கள் என்ற பெயரில், விபசாரம் நடப்பதாகவும், அசிங்கமான, சட்ட விரோதமான சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, டான்ஸ் பார்களில், அதிரடி சோதனைகள் நடத்திய போலீசார், இத்தகைய பார்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, மாநில அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்ற, மகாராஷ்டிரா அரசு, டான்ஸ் பார்களுக்கு, 2005ம் ஆண்டு தடை விதித்தது.
இதை எதிர்த்து, பார் உரிமையாளர் தரப்பில், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டான்ஸ் பார்களுக்கு தடை விதித்து, மாநில அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி நிஜ்ஜார் தலைமையிலான, "பெஞ்ச்' செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது. இதில், "டான்ஸ் பார்களுக்கு தடை விதித்த, மகாராஷ்டிரா மாநில அரசின் உத்தரவு செல்லாது. உரிய லைசென்ஸ் பெற்று, மீண்டும் டான்ஸ் பார்களை நடத்தலாம். அத்துடன், டான்ஸ் பார்களுக்கு அனுமதி வழங்கி, மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்படுகிறது' என, தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நடனமங்கைகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இனிப்புகள் வழங்கி தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
அதே சமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், டான்ஸ் பார்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவில், அரசு உறுதியாக இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், இரு சபையிலும், தீர்மானம், ஏகமானதாக நிறைவேறிய பின் தான், சட்டமாக்கப்பட்டது. மாநிலத்தின் இரு சபையின் நிரந்தர உறுப்பினர்களை கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு சட்ட ஆலோசனை கேட்கப்படும். இது குறித்து, சட்டசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி அப்பீல் செய்வது; இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் பெரிய பெஞ்ச் விசாரிக்க கோருவது அல்லது டான்ஸ் பார்களுக்கு எதிரான தடையை நீடிக்கும் வகையில், மும்பை போலீஸ் சட்டத்தை திருத்தம் செய்வது ஆகிய வாய்ப்புகள் தான் உள்ளன. எனவே அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம் என்று பாட்டீல் கூறினார். Click Here