கள்ளக்காதலின் மிச்சம்... 2 ஆண்டுக்கு முன் கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் எலும்புகள் மீட்பு
சென்னை: உன்னுடன் வந்து விடுகிறேன், என்னை எங்காவது கூட்டிக் கொண்டு போய் வாழு என்று கள்ளக்காதலனை வற்புறுத்தி, அதனால் ஆத்திரமடைந்து அவனால் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டரின் உடல், 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2 நாள் தேடுதலுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அப்போது 25 வயதான கலைவாணி. இவருக்கு சுரேஷ் குமார் என்ற கணவரும், குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால் கள்ளக்காதலில் மூழ்கினார். வெங்கடேசன் என்பவருடன் தனி வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். இவர் வக்கீல் குமாஸ்தாவாக இருந்தவர். வெங்கடேசன் மீதான மோகத்தில் சுரேஷ்குமாரை புறக்கணிக்க ஆரம்பித்தார் கலைவாணி.
மனைவியின் கள்ளக்காதல் சுரேஷ் குமாருக்குத் தெரிய வந்தது. அதிர்ந்தார். மேலும் மீள முடியாத அளவுக்கு அவர் கள்ளக்காதலில் திளைத்திருப்பதையும் அறிந்தார். மனைவியைக் கண்டித்தார். ஆனால் கள்ளக்காதல் கண்ணை மூடியதால் அதை கேட்கவில்லை கலைவாணி. அடிக்கடி லீவு போட்டு விட்டு வெங்கடேசனுடன் பல இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் எனக்கு புருஷன் வேண்டாம், வேலை வேண்டாம், யாரும் வேண்டாம், உன்னுடனேயே வந்து விடுகிறேன், எங்காவது கூட்டிக் கொண்டுபோ என்று வற்புறுத்த ஆரம்பித்தார். இதனால் வெளியூர்களுக்கு டூர் போல போய் வரலாம் என்று அழைத்தார் வெங்கடேசன். இதையடுத்து 10 நாள் லீவு போட்டு விட்டு கிளம்பி விட்டார் கலைவாணி. கொடைக்கானல் உள்ளிட்ட பல ஊர்களுக்குப் போயுள்ளனர். சந்தோஷமாக இருந்துள்ளனர். பின்னர் ஊர் திரும்பினர்.
ஊர் திரும்பிய பிறகும் கள்ளக்காதலன் நினைவிலேயே இருந்துள்ளார் கலைவாணி. மீண்டும் என்னை கூட்டிக் கொண்டு போ என்று வற்புறுத்த ஆரம்பித்தார். ஆனால் இதை வெங்கடேசன் ஏற்கவில்லை. இந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் கலைவாணியைக் காணவில்லை.
இதுகுறித்து சுரேஷ் குமார் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பழைய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அங்கு அனாதையாக நின்ற ஸ்கூட்டி ஒன்றில், 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான எஸ்ஐ கலைவாணி பெயரில் ஆர்சி புத்தகம் இருந்தது.
இதுகுறித்து உடனடியாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமார் தலைமையில் மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. கலைவாணியின் செல்போனை மீண்டும் ஆய்வு செய்தபோது, அதில் வெங்கடேசன் சிக்கினார்.
அவரிடம் விசாரணை நடத்திய போது எஸ்ஐயுடன் கள்ள காதல் வைத்திருந்தேன். திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் கொலை செய்தேன்' என ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். சடலத்தை மறைக்க உதவியாக இருந்த அவரது நண்பர் சுப்பன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கலைவாணியைக் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்க வெங்கடேசனை, காவேரிப்பாக்கம் அருகே உள்ள சங்கரம்பாடி பாலாறுக்கு வெங்கடேசனை போலீசார் அழைத்து சென்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் சடலத்தை தேடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால் உடலோ, எலும்புக் கூடோ எதுவும் கிடைக்கவில்லை. கலைவாணியின் கொலுசு மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து நேற்று மீண்டும் தோண்டும் பணி தொடர்ந்தது. அதில் 2 கை எலும்புகள் கிடைத்தன. பின்னர் மண்டை ஓடு, இடுப்பு எலும்பு, கால் எலும்புகள், கலைவாணியின் மூக்குத்தி, கம்மல் போன்றவை சிக்கின.
இதையடுத்து எலும்புக் கூடுகளை தடயவியல் சோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் டிஎன்ஏ சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெங்கடேசன் குறித்த மேலும் பல தகவல்களும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. அவர் வெறும் 5ம் வரைதான் படித்துள்ளார். வக்கீல் குமாஸ்தா என்று மோசடியாக செயல்பட்டுள்ளார்.
மனைவியின் கள்ளக்காதல் தெரிந்தும் கூட குழந்தைகளுக்காக அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார் சுரேஷ்குமார். மனைவி செய்த தவறுகளைத் திருத்தப் பார்த்துள்ளார். ஆனால் அவரை மீறிப் போய் விட்டார் கலைவாணி. அப்படியும் கூட மனைவியை விட்டுப் பிரியாமல் குழந்தைகளுக்காக உடன் இருந்து வந்துள்ளார் சுரேஷ் குமார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் தனது மனைவியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான் தடம் மாறி கள்ளக்காதலன் பக்கம் முழுமையாக சாய்ந்துள்ளார் கலைவாணி. கடைசியில் உயிரை விட்டுள்ளார்.