74 அடியை தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்! ஆடி 18க்கு முன் அணை திறக்கப்படுமா?

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கணமழை காரணமாக அங்குள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து வற்றிப் போன மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வற்றிப்போன மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து தற்போது 74.14 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் செப்டம்பர் மாதம்தான் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்வதால் அணை நிரம்பி வருகிறது. எனவே ஆடிப்பெருக்கு திருவிழாவிற்கு முன்பாக அதாவது ஆகஸ்ட் 3ம் தேதிக்கு முன்னதாக அணை திறக்கப்பட வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணை திறந்து காவிரியில் நீர் வரத்து இருந்தால் மட்டுமே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பாக கொண்டாட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications