மீண்டும் அத்துமீறல்: குதிரைகளில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 50 சீன வீரர்கள்

சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்டையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் வருவது இது ஒன்றும் முதல் முறையன்று. அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி கிழக்கு லடாக் பகுதிக்குள் ஊடுருவி அங்குள்ள தௌலத் பேக் ஓல்டி பகுதியில் கூடாரம் அமைத்தனர்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி சீனாவுக்கு சென்று அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களில் இந்த ஊருடுவல் நடந்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி சீன வீரர்கள் இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தூக்கிச் சென்றனர். இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட பிறகே அதை திருப்பிக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications