கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு!
மாண்டியா: கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. கபினி அணை நிறைந்து வழிந்ததைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அனைத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வந்தது. தற்போது கபினி அணைக்கு நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உள்ளது.

கபினி அணையில் இருந்து மட்டுமே இதுவரை தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி நீரை தேக்கி வைக்கும் மற்றொரு அணையான கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 123.12அடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர் வரத்து 37,856 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 17, 759 கன அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications