கோவைக்கு வந்த மனித தலை... ரயிலில் தொங்கியபடி வந்ததால் பரபரப்பு!
கோவை: கோவைக்கு வந்த ரயிலில் ஒரு மனித தலை தனியாக தொங்கியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் ஹைதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலாகும்.
ரயில் ஸ்டேஷனுக்கு வந்து நின்றபோது, முன்பகுதியில் ஒரு மனித தலை தொங்கியபடி இருந்ததைப் பார்த்து பிளாட்பார்மில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அலறி ஓடினர். யாரேனும் ரயிலுக்கு அடியில் சிக்கியிருக்கலாமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தலையை மீட்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். தலை மட்டுமே இருந்தது. உடல் இல்லை. எனவே தண்டவாளத்தில் யாரேனும் சிக்கி பலியாகியிருக்கலாம். தலை மட்டும் ரயிலில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில், முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே கேட் அருகே ஒரு உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதை விரைந்து சென்று போலீஸார் மீட்டனர்.
மீட்கப்பட்ட தலை மற்றும் உடல் ஆகியவை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.