ஒகேனக்கல் அருவியில் அளவில்லாத வெள்ளம்… காவிரி கரையோர பகுதிகளில் எச்சரிச்கை
சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரிக்கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான தண்ணீர் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. வெள்ள ஆபத்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 19 ஆயிரத்து 75 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணை நீர்மட்டம் இன்னும் சில தினங்களில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications