கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்: ஆகஸ்ட் 10 க்கு மாற்றம்… வைகோ அறிவிப்பு
சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம், ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அணுஉலையை அகற்றக் கோரி, சென்னையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடத்துவது என கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 19 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், தூத்துக்குடியில் நேற்று கடற்கரை பகுதி மக்கள், குறிப்பாக மீனவப் பெருமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி போராட்டத்தை, வேறு தேதியில் மாற்றி நடத்திடுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னை- சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்நடைபெறும்.
இந்தப் போராட்டத்தில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு உணர்வாளர்களும், தென்தமிழ் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உணர்வு உடையோரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.