தெலுங்கானாவில் ராயலசீமா.. காங்கிரஸின் 'கிரேட் எஸ்கேப்' பிளான்!

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரக் கூடிய மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. ஆந்திராவின் தெலுங்கானாவில் 117 சட்டசபை தொகுதிகளும் 17 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. கடலோர ஆந்திராவில் 123 சட்டசபை தொகுதிகளும் 17 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. ராயலசீமாவில் 52 சட்டசபை தொகுதிகளும் 8 லோக்சபா தொகுதிகளும் உள்ளன.
அண்மைய தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 36% வாக்குகளையும் தெலுங்குதேசம் 21% வாக்குகளையும் காங்கிரஸ் 15%, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8%, பாஜக 7% வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய சூழலில் அதாவது ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் இந்த கதியைத்தான் எதிர்கொள்ள நேரிடும்.
அதே நேரத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைத்துவிட்டால் அந்த கோரிக்கைக்காக போராடி வரும் முன்னணி அரசியல் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியையே காங்கிரஸில் இணைத்துவிடுவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இணைந்தால் 51% வாக்குகள் கொண்ட பிரம்மாண்ட கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துவிடும்.
இதனால்தான் காங்கிரஸ் கட்சியானது ஆந்திராவை பிரித்தாக வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
தெலுங்கானா போராட்டக் குழுவினரின் கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு தெலுங்கானா தனி மாநிலத்தை அமைத்தால் காங்கிரஸ் கட்சி அப்பகுதியில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றுவது நிதர்சனம்.
இதனாலேயே இப்போது ஆந்திராவை பிரித்தே தீருவது என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் ராயலசீமாவை துண்டாடுவதன் மூலமாகவும் ஆதாயம் கிடைக்கும் என்று கருதியே 'ராயல தெலுங்கானா'வை காங்கிரஸ் உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த ராயல தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்த கட்சிகளில் ஒன்று மஜ்லிஸ் கட்சி. இதனால் மஸ்லிஜ் கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதும் காங்கிரஸின் கணக்காக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
மேலும் ராயலசீமா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியான தலித்துகள், முஸ்லீம்கள் அதிகம். இதனாலேயே இந்தப் பகுதியையும் தெலுங்கானாவுக்குள் கொண்டு வந்து முழு லாபம் அடைய காங்கிரஸ் திட்டமிடுகிறது.
ஆக தெலுங்கானா தனி மாநிலத்தை அல்லது ராயல தெலுங்கானாவை அமைப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
எஞ்சிய ஆந்திராவில் ஆட்சியை பறிகொடுத்தாலும் தெலுங்கானாவில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழும்!!












Click it and Unblock the Notifications