தாம்பரம் ரயில் நிலைய மேம்பாலத்தில் இருந்து குதித்து இன்போசிஸ் என்ஜினியர் தற்கொலை
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து இன்போசிஸ் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதீப் குமார் ஜனா(33). மெக்கானிக்கல் என்ஜினியர். அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் பல ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கிழக்கு தாம்பரத்தில் உள்ள மகாலக்ஷ்மி நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.
அவர் நேற்று காலை 7.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 50 அடி உயரத்தில் இருந்து குதித்த அவரின் தலையில் பலத்த அடிபட்டு இறந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த பியர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அவரது உடல் மீது ஏறியது. இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது பெற்றோருக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
ஜனா அண்மை காலமாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். அவருடன் தங்கியிருந்த நபர் திருமணமாகி போகவே ஜனா மன அழுத்தத்தின் உச்சியில் இருந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்து மகனுடன் தங்கியிருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டிற்கு குடிவந்த ஜனா தங்களுடன் அவ்வளவாக பேசியது கூட கிடையாது என்று முதல் மாடியில் தங்கியிருக்கும் கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தை சேர்ந்த 2 நபர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஜனாவின் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications