சிவகங்கை மாவட்டத்தில் கல்லா கட்டும் உளவுப்பிரிவு போலீசார்... நடவடிக்கை பாயுமா?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு போலீசார் காவல்நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து கல்லா கட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏழு தாலுக்கா உள்ளது. இதில் ஆறு டிஎஸ்பிக்கள் உள்ளனர். 36 காவல்நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் சிறப்பு நுண்ணறிவ உளவுப்பிரிவு போலீசார் 12 பேரும், மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு போலீசார் 34 பேரும் உள்ளனர்.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு தனிப்பிரிவு போலீசார் என நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பதவிக்க வருவதற்கும் பணம் கொடுப்பது உண்டு. இதனால் காவல்நிலையங்களில் வரும் புகார்களில் பணம் கொழிப்பவர்களுக்கு சாதகமாக முடித்து தரும்படி போலீசாரை தனிப்பிரிவினர் மிரட்டுகின்றனர். புகார் அளவில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு என ஒரு தொகை நிர்ணயித்துள்ளனர். அதுவே எப்ஐஆர் போட்ட வழக்கு என்றால் அதற்கு ஒரு தொகை, எஸ்பிக்கு தெரிந்து விட்டது என்றால் அதற்கு ஒரு தொகை என எல்லாவற்றிலும் பணம் பார்க்கின்றனர்.
தனிப்பிரிவு போலீஸ்
எஸ்பியின் தனிப்பிரிவு போலீசார் சொல்வதை செய்யாவிட்டால் அந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் ஆகியோர் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதால் எஸ்பியின் தனிப்பிரிவு போலீசார் சொல்வதை உடனடியாக செய்து கொடுத்து விடுவார்கள்.
சொந்த தொழில் வேறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 34 பேரில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணி புரிபவர்கள். தனிப்பிரிவு போலீசார் நீண்ட காலம் ஒரே இடத்தில் பணி புரிந்தால் தகவல்கள் எளிதில் கிடைக்கும் என்பதால் பெரும்பாலோரை அதே இடத்தில் வைத்திருப்பார்கள். அதனை சாதகமாக பயன்படுத்து பலரும் அரசு சம்பளம் வாங்குவதோடு சொந்த தொழிலும் செய்து காசு சம்பாதித்து வருகின்றனர்.
மினி பஸ் ஓனர்கள்
ரியல் எஸ்டேட், ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடுவது, மினிபஸ் வாங்கி ஓட்டுவது உள்ளிட்டவைகளுடன் திருவிழா காலங்களில் கடைகளை ஏலத்தில் எடுத்து உள் வாடகைக்கு விடுவது , வருவாய்ததுறை சார்பில் நடத்தப்படும் கருவேல மர ஏலம் உள்ளிட்டவற்றில் தங்களுக்கு சாதகமானவர்களுக்கு வாங்கொடுத்து கமிசன் பார்ப்பது என பலவும் செய்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மினிபஸ் வாங்கி ஓட்டும் அளவிற்கு தனிப்பிரிவு போலீசார் உள்ளனர் என்பதே இதற்கு சான்று.
கட்டப்பஞ்சாயத்து
இதுதவிர ஆளும்கட்சியினருடன் கூட்டணி வைத்து கொள்வது, சாதிக்கட்சியினருடன் கூட்டணி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, தனக்கு சாதகமாக செயல்படாத போலீசாருக்கு எதிராக சாதிக்கட்சியினரை வைத்து மொட்டை பெட்டிசன் போட்டு எஸ்பியிடம் அதனை உண்மை என நம்ப வைப்பது உள்ளிட்ட பல தில்லு முல்லு வேலைகளை செய்கின்றனர்.
சட்டவிரோத செயல்களுக்கு உடந்தை
சமீபத்தில் சிவகங்கையில் சிறுமியை கொலை செய்து சுவற்றில் வைத்து புதைத்து விட்டு தப்பியவரை பற்றிய விபரங்கள் தனிப்பிரிவு போலீசாருக்கு நன்கு தெரியும். ஆனால் வேண்டுமென்றே எஸ்பியிடம் சொல்ல வில்லை. அது போல சட்டவிரோத செயல்கள் எங்கு நடைபெறுகிறதோ அவர்களிடமே நேரில் போய் மாதம் மாதம் மாமூல் வசூல் செய்கின்றனர்.
மாமூல் வேட்டை
சமீபத்தில் திருப்பத்தூரில் லாட்டரி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர் மாதம் தோறும் தனிப்பிரிவு போலீசாருக்கு மாமூல் கொடுப்பதாக டிஎஸ்பி வெள்ளத்துரையிடம் ஆதாரப்பூர்வமாக கொடுத்துள்ளார். இது போல காரைக்குடி பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் பற்றி உளவுப்பிரிவு போலீசாருக்கு நன்கு தெரியும். வேண்டுமென்றே எஸ்பியிடம் தகவல் கொடுக்காமல் உள்ளனர். அதனால்தான் எஸ்பி அஸ்வின் கோட்னிஷ் மானாமதுரை டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைத்து சிவகங்கை மாவட்டத்தில் எங்கு கொள்ளைச் சம்பவம் நடந்தாலும் அதனை விசாரிக்க சொல்லி நியமித்துள்ளார்.
டீல் பேசிய தனிப்பிரிவு போலீஸ்
தனிப்படை நியமித்த அடுத்த நாளிலேயே மதகு பட்டி பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது தனிப்படை, அவர்களை விடுவிக்க சொல்லி தனிப்படையினரிடம் டீல் பேசியவர் தனிப்பிரிவு போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் கல்லா கட்டி வரும் மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதவரை குற்ற செயல்கள் குறையாது என்பது பொதுமக்களின் கருத்து. அதிலும் காரைக்குடி பகுதியில் தொடர் கொள்ளைச் சம்பவங்களுக்கு தனிப்பிரிவு போலீசாரும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications