ஒரே ஆண்டில், ஒரே இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்படுவது யோசிக்க வேண்டிய விஷயம் - வாசன்
திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் காமராஜர் வெண்கலச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலையை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்து பேசுகையில்,
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். ஒரே இயக்கத்தை சேர்ந்த ஆறு பேர் ஒரே ஆண்டில் கொல்லப்படுவது யோசிக்க வேண்டிய விஷயம். இந்த நிலை மாற, போலீசார் இரும்புக்கரம் கொண்டு செயல்படவேண்டும்.
தமிழகத்தில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தர முடியும்.
பெருந்தலைவர் காமராஜர் காட்டிய வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு ரூபாய் 27 ஆயிரத்து 258 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 20 கோடி மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயனடைகின்றன. உணவு பாதுகாப்புத்திட்டத்தில் 81 கோடி பேர் பயனடைய உள்ளனர். நமது நாட்டில், 1974 ல் 14 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, தற்போது 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் மின்தேக்கங்கள் அனைத்தும் காமராஜர் காலத்தில் கொண்டுவரப்பட்டது தான். காமராஜருக்கு பின் தமிழகத்தில் அணை கட்ட யாரும் முன்வரவில்லை. அது தான் தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது என்றார் வாசன்.