தெலுங்கானாவுக்கு வரவேற்பு... காங்கிரஸின் 'உள்நோக்க' நடவடிக்கைக்கு கண்டனம்: மோடி!

மோடி தமது இணையதளத்தில் அனைத்து ஆந்திரா பகுதி மக்களுக்கும் பகிரங்க கடிதம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 11-ந் தேதி உங்களை சந்திக்க இருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் பற்றியும் பிற ஆந்திர பகுதி மக்களின் கவலை குறித்தும் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 9 ஆண்டுகாலம் எதையுமே காங்கிரஸ் கட்சி செய்யாமல் கடந்த சில நாட்களில் தெலுங்கானா தொடர்பாக முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. தெலுங்கானா விவகாரத்தில் உரிய நேரத்தில் எதையும் செய்யாமல் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசும் அந்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.
ஆனால் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக, வெளிப்படையாகவே செயல்பட்டது. இந்த நாட்டிலேயே பாரதிய ஜனதா கட்சி மட்டுமே சிறிய மாநிலங்களை உருவாக்கியுள்ளது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் சத்தீஸ்கர், உத்தர்காண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று உறுதி கொடுத்தது. ஆனால் 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லையே..
நான் காங்கிரஸ் கட்சியிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
- தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏன் ஒருமித்த கருத்து எழவில்லை? இதற்காக முன்கூட்டிய திட்டமிடல் எதையும் மேற்கொண்டீர்களா?
- தெலுங்கானாவுக்குள் ஹைதராபாத் இருக்கின்ற போது அதை பொது தலைநகராக அறிவுத்துள்ளீர்களே.. இது சரியல்ல.
- கடலோர ஆந்திரா, ரயாலசீமா மக்களும் தெலுங்கானா தனி மாநிலத்தை ஆதரிக்கும் வகையில் என்ன திட்டம் மேற்கொண்டுள்ளீர்கள்?
தனி ஆந்திர மாநிலம் உருவாக பொட்டி ஸ்ரீராமுலு உயிரைத் தியாகம் செய்தார். அவரது தியாகத்தின் வழியில் தெலுங்கு பேசும் அனைத்து மக்களும் முன்னேற்றத்துக்காக ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications