ராமதாஸ், அன்புமணிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி ஜி.கே. மணி வழக்கு: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி. கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பாமக தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கடந்த 15 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எந்த காரணத்தையும் கூறாமல் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வாபஸ் பெற்றுவிட்டது. அரசியல் காரணங்களுக்காக எந்தவித விதிமுறையும் பின்பற்றாமல் தமிழக அரசு இதுபோல் நடவடிக்கையை எடுத்துள்ளது.
எனவே அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் இது குறித்து வரும் 5ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.