பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெறுக... வைகோ வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால், ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. அதனைச் சீர்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திக்கொண்டே போவதை ஏற்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஏழாவது முறையாக டீசல் விலையும், கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்தாவது முறையாக உயர்ந்தப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது :
7 முறை டீசல் விலை
"மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை தனது கடமையாகக் கருதி செயல்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஏழாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
5முறை பெட்ரோல் விலை
கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்தாவது முறையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வரியையும் சேர்த்து டீசல் விலை 61 காசுகளும், பெட்ரோல் விலை 89 காசுகளும் அதிகரித்துவிட்டன. நாட்டின் பணவீக்க விகிதம் உயர்வதற்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் முக்கியக் காரணியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இருக்கிறது.
தவறான பொருளாதார கொள்கை
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால், ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. அதனைச் சீர்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திக்கொண்டே போவதை ஏற்க முடியாது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, விலை ஏற்றத்தைக் கண்காணிக்கும் கடமையில் இருந்து ஒதுங்கிக் கொண்ட மத்திய அரசின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எழை மக்கள் பாதிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால், விலைவாசி உயர்ந்து சாதாரண ஏழை எளிய மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
சமையல் எரிவாயு விலை
இதைப்போலவே சமையல் எரிவாயு மானிய விலையில், ஆண்டிற்கு ஒன்பது உருளைகள்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு கொண்டுவந்துவிட்டு, மானியம் இல்லாத எரிவாயு விலையை ரூபாய் 44 உயர்த்தப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், சமையல் எரிவாயு விலையையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.