தமிழ்நாட்டை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும்: 'கொங்குநாடு' ஈஸ்வரன்
சென்னை: தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிப்பதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிக வருவாய் அளிக்கக் கூடிய பகுதி கோயம்புத்தூர், திருப்பூரை உள்ளடக்கிய கொங்குநாடுதான். டெல்லியில் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநில முதல்வருக்கும் ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட மாநில முதல்வருக்கும் ஒரே மாதிரியான நேரம் ஒதுக்குகின்றனர்.
கடந்த முறை தமிழக முதல்வர் டெல்லி மாநாட்டில் பேசிக் கொண்டிருந்த போது மணி அடித்துவிட்டனர். ஏழரை கோடி மக்களின் பிரச்சனையை 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாநில முதல்வர் பேசும் நேரத்தில் பேசுவது என்பது சாத்தியம்தானா? ஆனால் தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்திருந்தால் 3 முறை தமிழக நலன் பற்றி பேச வாய்ப்பு கிடைத்திருக்கும் அல்லவா?
இதனால் தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டியது அவசியம். ஒரு மாநில நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள், வட்டாரங்கள் என பிரிக்கப்படுகிறது. அதேபோல் மாநிலத்தையும் ஏன் பிரிக்கக் கூடாது. கொங்குநாடு தனி மாநிலம் உருவானால் சென்னையைப் போல கோயம்புத்தூரும் பிரம்மாண்ட வளர்ச்சி அடையும் என்றார்.