சிபிஐக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!

சி.பி.ஐ. கூண்டுக்கிளியாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து, அதற்கு தன்னாட்சி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது.அதன்படி, சி.பி.ஐ.க்கு கூடுதல் நிதி அதிகாரம் வழங்கப்படும், சி.பி.ஐ. நடத்துகிற விசாரணைகளை ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு கண்காணிக்கும், சி.பி.ஐ.யின் இயக்குனர் ஒரு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார் என குறிப்பிட்டு, இது தொடர்பாக 41 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இதற்கு சி.பி.ஐ. பதில் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. 14 பக்கங்களை கொண்ட அந்த பிரமாண பத்திரத்தில், சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்குவதற்காக கூறப்பட்டுள்ள திட்டங்களை விட மேலும் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
சி.பி.ஐ.யின் இந்த பிரமாண பத்திரம் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில், அனைத்து வலிமையும் கொண்ட சி.பி.ஐ. இயக்குனரை கட்டுப்பாடுகள், சம நிலை இன்றி விட்டுவிட்டால், ஆற்றல் மிக்க அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிற அபாயம் உள்ளது. அது அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானது.
சி.பி.ஐ. இயக்குனர் பதவி 2 ஆண்டு காலம் என்பது சி.பி.ஐ. அமைப்பின் தொலைநோக்கிற்கு முட்டுக்கட்டையாக அமையாது. நீண்ட காலம் தேவைப்பட்டால் அது தவிர்க்கப்படாது.
சி.பி.ஐ. மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்கும் அரசின் முடிவு தவிர்க்க இயலாத ஒன்று. சி.பி.ஐ. இயக்குனரிடம் ‘குரூப் ஏ' அதிகாரிகள் மீதான முழுமையான ஒழுங்கு நடவடிக்கை அதிகாரத்தை விட்டு விட முடியாது. இது சட்டவிரோதமானது.
மூத்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு அனுமதி தர ஊழல் கண்காணிப்பு ஆணையர் தலைமையிலான சுதந்திரமான குழு அமைக்க வேண்டும் என்ற சி.பி.ஐ. கோரிக்கை ஏற்புடையது அல்ல என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications