ஜெயலலிதா படத்தை தீ வைத்து கொளுத்திய அதிமுக தொண்டர்!
திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதா படத்தை அதிமுக தொண்டர் ஒருவரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ளது வளையன்காடு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). சமையல் தொழிலாளி. அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவரது மகன் சவுந்தரபாண்டியன் - மருமகள் அமுதா தம்பதிகளுக்குAAம், அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் - தீபா தம்பதிகளுக்கும் இயையே முன் விரோதம் காரணமாக வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இதனால், ஆறுமுகம் மகன் சவுந்தர பாண்டியன் மற்றும் எதிர்தரப்பு பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த ஆறுமுகம், வளையன்காடு சாலை முன்பு அதிமுக கட்சிக் கொடிக் கம்பம் முன்னிலையில் , அதிமுக கட்சி வேட்டிகள், உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் முதல்வர் ஜெயலலிதா படம் ஆகியவற்றை தீ வைத்து எரித்தார்.
இந்த தகவல் அறிந்த அப் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆறுமுகத்தை அடித்து உதைத்தனர். மேலும், ஆறுமுகம் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் முதல்வர் ஜெயலலிதா படத்தை அதிமுகவைச் சேர்ந்த ஒருவரை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.