வெளிநாட்டு தம்பதியர் இந்தியாவில் வாடகைத்தாயை அமர்த்த நிபந்தனைகள்: புதிய சட்டம்!
டெல்லி: வெளிநாட்டு தம்பதியர் இந்தியாவில் வாடகைத்தாயை அமர்த்த நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டத்தை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும் கூடிய புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இயற்கையிலேயே கர்ப்பப் பை அமையப் பெறாத பெண்கள், அதில் சிக்கல்களை கொண்டவர்கள், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பை அகற்றப்பட்டவர்கள் போன்றோர் வாடகைத்தாய் ஒருவரை அமர்த்திக்கொண்டு அவர் மூலம் குழந்தை பெற்று வரிசாக வளர்க்கின்றனர்.
ஆனால் இப்போது வாடகைத்தாய் முறை ஒரு வணிகம் போல நடைபெற்று வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் இல்லாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையை மாற்றுகிற விதத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வர உத்தேசித்துள்ளது.

செயற்கை கருவாக்க மையங்கள்
"துணையுடனான கருவாக்க தொழில்நுட்ப மசோதா" என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள மசோதாவில், பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு குழந்தை இல்லாத தம்பதியரின் பிரச்னைக்கு தீர்வு காண உதவும் செயற்கை முறை கருவாக்க மையங்கள், அரசின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்படும் என்றும் வியாபாரம் போன்று வாடகைத்தாய் முறை பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தம்பதியர்
வெளிநாட்டு தம்பதியர் இந்தியாவில் வாடகைத்தாயை அமர்த்த நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டத்தை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

3 குழந்தைகள் பெற்றவர்கள்
வாடகைத்தாய்மார், அவர்களுக்கு பிறக்கிற குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் தங்கள் சொந்தக் குழந்தைகள் உள்பட தொடர்ந்து 3 குழந்தைகள் பெற்றவர்கள் வாடகைத்தாயாக செயல்பட தடை விதிக்கப்படும் என்றும் மசோதாவில் இடம் பெற்றுள்ளது.

35 வயதிற்கு மேற்பட்டவர்கள்
21 வயதுக்கு உட்பட்டவர்களும், 35 வயதுக்கு அதிகமானவர்களும் வாடகைத்தாயாக செயல்பட முடியாது. மேலும், இரண்டு பிரசவங்களுக்கு இடையே வாடகைத்தாய்மார்கள் குறைந்தது 2 ஆண்டு காலம் இடைவெளி விடுவது கட்டாயம் ஆக்கப்படும்.

புதிய சட்ட மசோதா
இந்த கட்டுப்பாடுகளை கொண்ட சட்ட மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையில் வைக்கப்படுகிறது. அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications