வெளிநாட்டு சிறையில் தவிக்கும் மீனவர்கள்: உடனடி நடவடிக்கை தேவை; அதிமுக கோரிக்கை
டெல்லி: ஈரான் மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. மு.தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் தெலுங்கானா பிரிவினை, போடாலாந்து விவகாரம் காரணமாக அமளி ஏற்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் இதுகுறித்து நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் மு.தம்பிதுரை இந்த பிரச்சினையை எழுப்பி பேசியதாவது
ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 16 தமிழக மீனவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழிதெரியாமல் ஈரான் நாட்டு கடல் எல்லைக்கு சென்றுவிட்டனர். ஈரான் அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சிறையில் அவதிப்பட்டுவரும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த 26 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, இதுதொடர்பாக பிரதமர் இந்த பிரச்சினையில் தலையிட்டு அவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார்.
எனவே இருநாட்டு சிறைகளில் வாடும் தமிழர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தம்பிதுரை கூறினார்.