ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற முடியாது: முலாயம் திட்டவட்டம்
உத்தரபிரதேச மாநிலம், கவுதம்புத் நகரில் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால், மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படுகிற மசூதி ஒன்றின் சுவரை இடித்துத்தள்ள உத்தரவிட்ட குற்றச்சாட்டின்பேரில், கடந்த 27 ஆம் தேதி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு சவால்விடும் விதத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலின் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற முடியாது என ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானது மற்றும் இறுதியானது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
முதல்வர் அகிலேஷ் யாதவின் நடவடிக்கைக்கு முலாயம் சிங் யாதவ் ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.