ஆண்டனிக்கு ஆதரவாக கமல்நாத், சல்மான்! எதிராக வரிந்து கட்டும் பாஜக!!
டெல்லி: எல்லை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் கமல்நாத், , சல்மான் குர்ஷித் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் வரிந்து கட்டிக் கொண்டு ஆண்டனிக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானதற்கு பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் காரணம் என்று நாடாளுமன்றத்தில் ஆண்டனி அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அதற்கு முன்னதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தது. இதனால் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆண்டனி.
இன்று நாடாளுமன்றத்தில் ஆண்டனி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அமைச்சர்கள் கமல்நாத், மணீஷ் திவாரி, சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆண்டனியின் அறிக்கை சரியே என்கின்றனர்.

கமல்நாத் சொல்வது என்ன?
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் இது பற்றி கூறுகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் தவறான தகவலைத் தெரிவித்தார் என்ற கேள்விக்கே இடமில்லை. அவரிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பிறகு சில தகவல்கள் வந்திருந்தால் அவையும் தெரிவிக்கப்படும் என்றார்.

சல்மான் குர்ஷித்..
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரையில் ஆண்டனியின் அறிக்கையில் எந்த மாறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. இது அரசியலாக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுகளை நிறுத்தினால் அமைதி முயற்சிகள் பாதிக்கும் என்றார்.

பாஜகவின் அத்வானி..
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஆண்டனியின் அறிக்கையும் ராணுவத்தின் அறிக்கையும் மிக முரண்பாடாக இருக்கிறது. இது பாகிஸ்தான் ராணுவத்துக்கு சாதகமானதாக அமைந்துவிடும் என்றார்.

யஷ்வந்த் சின்ஹா
பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், நாடாளுமன்றத்தில் தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார் ஆண்டனி. அவருக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனைக்கான நோட்டீஸை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறேன் என்றார்.

வெங்கையா நாயுடு
பாஜகவின் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு, பாகிஸ்தான் வன்முறையை (வயலண்ட்) வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்தியாவோ சைலன்ட்டாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications