சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. பிஎம்டபிள்யூ கார் மோதி தமிழக இளைஞர் படுகாயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் வேலைக்குச் செல்வதற்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிஎம்டபிள்யூ கார் மோதி படுகாயமடைந்தார்.
அவரது பெயர் நாகராஜ் சாத்தையாராஜ். இவரும், சக தொழிலாளர்கள் 8 பேரும் வேலைக்குச் செல்வதற்காக வாகனத்திற்காக காத்திருந்தனர். அப்போது அவர்களது வாகனமும் வந்தது. அந்த சமயத்தில் படு வேகமாக வந்த ஒரு பிஎம்டபிள்யூ கார் அந்த வாகனம் மீது மோதியது. இதில் சாத்தையராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.
சாத்தையராஜின் நிலைமை பரவாயில்லை, உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
20 நாட்களுக்கு முன்புதான் சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்திருந்தார் சாத்தையராஜ். அவரது மாமா முத்துக்கருப்பன் அய்யனார், சிங்கப்பூரில் கடந்த 15 வருடமாக கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.