ஸ்டெர்லைட் ஆலை இயங்க தடை இல்லை: 2 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நச்சு வாயு வெளியேறியதை அடுத்து தூத்துக்குடி நகர மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆலைக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடி சீல்வைத்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால அனுமதி அளித்தது. இருந்தாலும் இறுதி தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று இறுதி தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே தீர்ப்பாயம் வழங்கிய 20 பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி 2 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வாயுக்கசிவு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துதான் வெளிப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.