ஆசிரியை குறித்து அவதூறாக எழுதி சிக்கிய 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி
நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே ஆசிரியை குறித்து அவதூறாக பள்ளி கழிப்பறையில் எழுதி வைத்ததற்காக டிசி கொடுக்கப்பட்டனர் 6 மாணவர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 பேரும் பிளஸ் ஒன் மாணவர்கள் ஆவர். பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கூட கழிப்பறையில், பள்ளி ஆசிரியர் ஒருவரையும், ஆசிரியை ஒருவரையும் இணைத்து ஆபாசமாக எழுதி வைத்திருந்தனர்.
மேலும் வகுப்பறை மற்றும் ஸ்டாப் ரூமிலும் இவர்கள் எழுதியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினர். தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியபோது பிளஸ் ஒன் படித்து வந்த 6 மாணவர்கள்தான் இதைச் செய்தது என்று தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆறு மாணவர்களின் பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் டிசி கொடுக்கப்படுவதாகவும், அதைப் பெற்றுக் கொண்டு பள்ளியை விட்டு செல்லுமாறும் தலைமை ஆசிரியர், பள்ளித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு ஆறு மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வாழ்க்கை வீணாகி விட்டதே என்று அதிர்ந்த அவர்கள் கடைக்குப் போய் எறும்புப் பவுடரை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டனர். இதையடுத்து ஆறு பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது ஆறு பேரும் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications